Mandaadi: ``10 வயது சிறுவனிடம் கேட்டால்கூட சொல்கிறான்; ஆரோக்கியமான மாற்றம்" - அரசியல் குறித்து சூரி

விடுதலை, கருடன், மாமன் ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சூரி நாயகனாக நடித்துள்ள புதிய படம் 'மண்டாடி'. இப்படத்தை, இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார். நாகையைச் சேர்ந்த மீனவர்களையும், அவர்களின் படகுப் போட்டிகளையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள `மண்டாடி' மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், திரைப்படம் 10-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நடிகர் சூரியும், நடிகை மஹிமா நம்பியாரும் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, `` 'மண்டாடி' திரைப்படம் மிகவும் நன்றாக வந்திருக்கிறது. மீனவர் சமூகம் சார்ந்த ஒரு கதையை மையமாகக் கொண்டுதான் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

நடிகர் சூரி
நடிகர் சூரி

இந்த 'மண்டாடி' திரைப்படம் நமது மீனவ மக்களின் வாழ்க்கை, அவர்களின் மரியாதை, அவர்களது உறவுகள் மற்றும் அந்த வாழ்க்கைக்குள் இருக்கும் உணர்ச்சிகள் என அனைத்தையும் பிரதிபலிக்கும். அவர்களுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் படம் இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அதே நேரத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி, பாசிப்பட்டினம், புதுக்குடி போன்ற கடலோரக் கிராமங்களில் பல வருடங்களாக பாரம்பரியமாக 'பாய்மரப் படகு போட்டி' நடந்து வருகிறது.

நமது தமிழ் மண்ணின் வீர விளையாட்டுகளான கபடி, ஜல்லிக்கட்டு போல, இந்த பாய்மரப் படகு போட்டியையும் உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சியாக இந்த படம் இருக்கும். பலருக்கு இப்படி ஒரு விளையாட்டு இருப்பதே தெரியாது. அவர்கள் தியேட்டரில் இந்த விளையாட்டைப் பார்க்கும்போது கண்டிப்பான முறையில் ஒரு புதிய அனுபவத்தைப் பெறுவார்கள்.

இந்த படத்தில் ஒரு மீனவனாக நடித்ததை நான் மிகப்பெரிய பாக்கியமாகக் கருதுகிறேன். இது எனக்கு ஒரு சாதாரண நடிப்பு அனுபவமாக மட்டும் இல்லாமல், வாழ்க்கையைக் கற்றுக்கொடுத்த ஒரு பாடமாகவே அமைந்தது. கடலுக்குள் சென்று மீன் பிடித்து வரும் அவர்களின் வலியை இதில் நடித்தபோதுதான் நான் முழுமையாக உணர்ந்தேன்.

மண்டாடி

ரசிகர்களும் மக்களும்தான் என்னை இந்த இடத்தில் உட்கார வைத்திருக்கிறீர்கள். ஒரு நகைச்சுவை நடிகனாக இருந்த என்னை, இன்றைக்கு 'மண்டாடி' போன்ற படங்கள் மூலம் ஒரு கதைநாயகனாக உயர்த்தியிருப்பது தமிழ் மக்கள்தான். மக்கள் அங்கீகரித்தால் யார் வேண்டுமானாலும் எந்த இடத்திற்கும் வர முடியும். மக்கள் என் மீது வைத்திருக்கும் இந்த அன்பிற்கு ஏற்றவாறு தொடர்ந்து நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்க ஆசைப்படுகிறேன். " என்றார்.

தொடர்ச்சியாக நடப்பு அரசியல் குறித்த கேள்விக்கு, ``இன்றைய இளைஞர்கள் மற்றும் சிறு குழந்தைகள் கூட சட்டமன்ற நிகழ்வுகளையும் அரசியலையும் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்துள்ளனர்.

10 வயது சிறுவனிடம் கேட்டால் கூட மக்கள் பிரதிநிதிகளின் பெயர்களைச் சொல்கிறான். இது மிகவும் ஆரோக்கியமான ஒரு மாற்றம். மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வு ஏற்படுவது நல்ல விஷயமே. ஆனால் திரைத்துறையைவிட்டு நடிகர் விஜய் விலகியது திரைத்துறைக்கு ஏமாற்றமே... 'அயலான்' மற்றும் 'இன்று நேற்று நாளை' போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ரவிகுமார் இயக்கத்தில் அடுத்து நடிக்கவுள்ளேன். இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாத இறுதியில் தொடங்கும்." என்றார்.



from விகடன்

Comments