தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்தி நடிப்பில், ‘சர்தார் 2’ திரைப்படம் உருவாகியிருக்கிறது.
இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது.
கார்த்தியுடன் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் கார்த்தி, ``சர்தார் முதல் பாகத்தின் கதையைப் பற்றி உங்களுக்கு ஏற்கனவே தெரியும். இந்த இரண்டாம் பாகம் அதைவிட மிக பிரமாண்டமான அளவில் உருவாகியுள்ளது. தற்போதைய காலகட்டத்திற்கு மிகவும் தேவையான ஒரு முக்கியமான கருப்பொருளை இந்தப் படம் பேசுகிறது" என்றார்.
அதைத் தொடர்ந்து பேசிய நடிகை மாளவிகா மோகன், ``சென்னைக்கு மீண்டும் வருவது எனக்கு எப்போதும் விருப்பமான ஒன்று. இது என்னுடைய இரண்டாவது வீடு போன்றது. இந்த ஊரும் மக்களும் எனக்கு எப்போதும் அளப்பரிய அன்பைக் கொடுத்துள்ளனர்.
உங்கள் அனைவருக்காகவும் இந்தத் திரைப்படத்தில் நாங்கள் அனைவரும் இணைந்து மிகக் கடுமையான உழைப்பைக் கொடுத்துள்ளோம்.
நீங்கள் அனைவரும் இதை நிச்சயம் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன். இந்தப் படத்தில் எனக்குத் டான்ஸ் எதுவும் இல்லை, ஆனால் மிகவும் சிறப்பான ஸ்டண்ட் காட்சிகள் இருக்கிறது. அதைச் செய்து நடித்தது எனக்குப் புதிய அனுபவமாகவும் மிகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. என்னுடைய கதாபாத்திரமும் மிகவும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்" என்றார்.
from விகடன்
Comments