National Awards: "தனுஷூக்கு அவ்வளவு புத்திசாலித்தனம் கிடையாது!" - கஸ்தூரி ராஜா பேசியது என்ன?

72ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. நடிகர் தனுஷுக்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, அவருடைய தந்தையும் பிரபல இயக்குநருமான கஸ்தூரி ராஜா செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

Raayan - 72nd National Awards
Raayan - 72nd National Awards

செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "தேசிய விருது கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அவருடைய பயணம், முயற்சி, சிந்தனை என எல்லாமே சரியாக இருக்கும்போது, அதற்கான அங்கீகாரம் தானாகவே தேடி வந்துவிடுகிறது.

இதில் நாம் பரிந்துரை செய்யவோ அல்லது இன்ப்ளூயன்ஸ் செய்யவோ எதுவும் இல்லை இது முழுக்க முழுக்க அவருடைய உழைப்பிற்கு கிடைத்த வெற்றி.

ஜூரிக்கள் சேர்ந்து எடுக்கும் முடிவுதான் இந்த விருது. என் மகனுக்கு ஒரே நேரத்தில் இரண்டு தேசிய விருதுகள் கிடைத்திருப்பது ஒரு தகப்பனாக எனக்கு மிகுந்த பெருமையளிக்கிறது.

அவர் தொடர்ந்து இதேபோல் பல விருதுகளை வெல்வார் என்று நம்புகிறேன். நாங்கள் அவர் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோதே இந்த நற்செய்தி வந்தது. வீட்டில் கேக் வெட்டிக் கொண்டாடினோம். ஒட்டுமொத்தக் குடும்பத்திற்கும் இது மட்டற்ற மகிழ்ச்சியைத் தந்துள்ளது." என்றார்.


தனுஷ், செல்வராகவன், கஸ்தூரி ராஜா
தனுஷ், செல்வராகவன், கஸ்தூரி ராஜா

மேலும் தொடர்ந்த அவர், "தனுஷை விடப் பெரிய நடிகர்கள் எத்தனையோ பேர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் இன்ப்ளூயன்ஸ் செய்து விருதை வாங்கிவிட முடியுமா என்ன?

இது அரசின் முடிவே தவிர வேறு எதுவும் இல்லை. நான்கு பேரிடம் பேசி, 'இந்த விருதை எனக்குக் கொடுங்கள்' என விருதுகளுக்கு தனுஷ் ஏங்குபவர் கிடையாது. அந்த அளவுக்குத் தனுஷுக்குப் புத்திசாலித்தனம் கிடையாது. இதற்கு முன்பே 'ஆடுகளம்', 'அசுரன்' படங்களுக்காக அவர் தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். விருது அறிவிக்கப்படும்போது அந்த மகிழ்ச்சியை ஏற்றுக்கொள்கிறோம், அவ்வளவே" என்று கூறினார்.

சமீபத்தில் தனுஷின் ரசிகர் மன்ற கொடி அறிமுகப்படுத்தப்பட்டு, சமூக வலைதளங்களில் அது அரசியல் வருகைக்கான அறிகுறியா என்ற விவாதம் தீவிரமாகப் பேசப்பட்டது.

இதுகுறித்து அவர், "அவர் கட்சி ஆரம்பிக்கப் போகிறாரா இல்லையா என்பது பற்றியெல்லாம் நாங்கள் அவரிடம் கேட்பதில்லை. நாங்கள் சந்தித்துக் கொள்ளும்போது படம், சம்பளம், அரசியல் அல்லது இந்த மாதிரி கொடி விஷயங்களைப் பற்றிப் பேசுவதில்லை." என்றார்.



from விகடன்

Comments