Jana Nayagan: "விஜய் சார் எங்களைப் பார்த்து 'டான்ஸ் ஓகேவா'னு கேட்டார்"- அனுபவம் பகிரும் மோனிஷா ப்ளசி
'மாவீரன்', 'கூலி', 'ஜனநாயகன்' என மோனிஷா ப்ளசியின் கரியர் கிராஃப் மேல்நோக்கி உயர்த்துகொண்டிருக்கிறது. ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன் என அடுத்தடுத்து நட்சத்திரங்களின் படங்களிலும் நடித்து வருகிறார்.

'ஜனநாயகன்' படம் வெளியாகியிருக்கும் இந்த நேரத்தில் அவரைச் சந்தித்துப் பேட்டி கண்டோம். 'ஜனநாயகன்' படத்தில் கிடைத்த அனுபவங்களை உற்சாகத்தோடு நம்மிடையே பகிர்ந்துகொண்டார்.
நம்மிடையே பேசியவர், "'டாப் குக் டுப் குக்' நிகழ்ச்சியில் இருந்தபோதுதான் இந்தப் படத்திற்காக போனில் என்னை அழைத்திருந்தார்கள்.
அப்போது, 'விஜய் சாரின் கடைசிப் படத்தில் நீங்கள் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும்' என்று உதவி இயக்குநர் சொன்னபோது, யாரோ என்னை பிராங்க் செய்கிறார்கள் என்றுதான் முதலில் நினைத்தேன்.
ஆனால், அது நிஜமென பிறகுதான் தெரிந்தது. இயக்குநர் அ. வினோத் சார் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியைப் பார்ப்பார்; அதன் மூலமாகத்தான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது என்று உதவி இயக்குநர் மூலம் தெரிந்துகொண்டேன்.

அதுமட்டுமில்லாமல், படப்பிடிப்பின் போது வினோத் சார் என்னிடம் வந்து, 'ஷோ ஷூட் எப்படிப் போய்க்கொண்டிருக்கிறது?' என விசாரித்தது எனக்குப் பெரிய ஆச்சரியத்தையும் கொடுத்தது.
வினோத் சார் எப்போதும் அமைதியாகத்தான் இருப்பார். ஒரு காட்சியில் மமிதா பைஜுவைப் பின்னால் அமரவைத்து நான் ஸ்கூட்டி ஓட்ட வேண்டும். நான் மிகவும் மெதுவாக ஸ்கூட்டியை ஓட்டினேன்.
அதைப் பார்த்த வினோத் சார் மைக்கில், 'மோனிஷா, படம் முடிஞ்சிடும்மா... இவ்வளவு ஸ்லோவா வேண்டாம்' என்று நகைச்சுவையாகக் கிண்டல் பண்ணினார்" என்றவர், விஜய்யுடன் நடித்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
அவர், "படத்தின் பூஜை அன்று விஜய் சாரை முதல்முறையாக நேரில் பார்த்தேன். இது நிஜமாகவே நடக்கிறது என்பதை என்னால் அப்போதுதான் நம்ப முடிந்தது. பிறகு ஷூட் முடிந்த இடைவேளையில் விஜய் சார் என்னிடம், 'வேறு என்னவெல்லாம் செய்வீர்கள்?' என ஒரு நாள் கேட்டார்.
எனது மைம் வீடியோக்களைக் காண்பித்தேன். அதை முழுமையாகப் பார்த்த விஜய் சார், 'என்னம்மா பேசாமலே இவ்வளவு கன்வே பண்றீங்க; இங்க உங்களைக் கட்டிப் போட்ட மாதிரி இருக்கும் போலயே' என்றார். சிறுவயதிலிருந்து அவருடைய நடனத்தை நாம் வியந்து பார்த்திருப்போம்.

இந்தப் படத்தில் அவருடன் நடனமாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. எட்டு ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறிய வாய்ப்பிற்காகக் காத்திருந்த எனக்கு, இது மிகப்பெரிய விஷயம்.
அப்போதுகூட ஒரு நடனக் காட்சி எடுத்து முடித்ததும் 'ஓகேவா' என எங்களைத் திரும்பிப் பார்த்துக் கேட்டார்" என்றவர், "ஒரு முறை ஷூட்டிங் ஸ்பாட்டில் பூஜா ஹெக்டே மேம் என்னைப் பார்த்து, 'நீங்க ரொம்ப கியூட்டா இருக்கீங்க' எனக் கூறினார். ஆனால், அவர்தான் அத்தனை அழகு!
மமிதா பைஜுவை முதன்முதலில் 'தளபதி கச்சேரி' பாடலுக்கான ரிஹர்சலில்தான் சந்தித்தேன். அங்கிருந்து எங்களுக்குள் நட்பு உருவானது. நான் ஷூட்டிங் ஸ்பாட்டில் நிறைய விஷயங்களைப் பார்த்து ஸ்கெட்ச் செய்துகொண்டிருப்பேன்.
அதைக் கவனித்த மமிதா, எனக்கு ஒரு வரையும் புத்தகத்தை வாங்கித் தந்து, 'தொடர்ந்து ஸ்கெட்ச் செய்யுங்கள்' என்றார். அதோடு, அன்போடு அவர் எழுதிய குறிப்பையும் என்னிடம் கொடுத்தார்.
படத்தின் ஆடியோ லான்ச் விழாவில் என்னால் கலந்துகொள்ள முடியாமல் போனபோது, மமிதா மேடையில் என் பெயரைக் குறிப்பிட்டுப் பேசியது எனக்கு மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது" என்றார்.

தொடர்ந்து பேசியவர், "அடுத்ததாக, 'கோயம்புத்தூர் மாப்பிள்ளை' திரைப்படத்தில் நகைச்சுவை கலந்த கதாபாத்திரத்திலும், விஜய் ஆண்டனி சாரின் 'லாயர்' படத்திலும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.
காமெடி மட்டுமின்றி, பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதே எனது ஆசை" என உற்சாகத்துடன் முடித்துக்கொண்டார்.
முழு பேட்டியைக் காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.
from விகடன்
Comments