Mouni Roy: ``நான் லெஸ்பியனா?" - விவாகரத்துக்குப் பிறகான வதந்தி குறித்து நடிகை மௌனி ராய்

நாகினி தொடர் மூலம் தமிழ் மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றவர் நடிகை மௌனிராய். இவர் தொடர்ந்து பாலிவுட்டில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் தொழிலதிபர் சூரஜ் நம்பியார் என்பவருக்கும் - நடிகை மௌனி ராய்-க்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த நிலையில், கடந்த மாதம் (மே) சூரஜ் - மௌனி ராய் இருவரும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில் இருவரும் தனித்தனியே தங்கள் பாதையைத் தேர்வு செய்வதாகத் தெரிவித்து, விவாகரத்தை அறிவித்தனர். ஆனால் இந்த விவாகரத்துக்குப் பிறகு பல்வேறு வதந்திகள் பரவின.

அதற்கு விளக்கமளிக்கும் வகையில், சமீபத்தில் நடிகை மௌனிராய் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேட்டியளித்திருந்தார்.

நடிகை மௌனி ராய்
நடிகை மௌனி ராய்

அந்தப் பேட்டியில், ``எப்போதும் எனக்கு துணையாக, ஒரு பாறை போல உறுதியாக நின்ற நண்பர்களும் குடும்பத்தினரும் எனக்கு அமைந்திருப்பதில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று உணர்கிறேன். எப்போதும் எனக்கு ஆதரவாகச் சிறந்த பெண் நண்பர்கள் இருந்துள்ளனர்.

என் வாழ்வின் நல்ல, கெட்ட மற்றும் கடினமான கட்டங்களில் அவர்கள் என்னுடன் இருந்திருக்கிறார்கள். உங்கள் வாழ்க்கையில் உங்களை ஊக்குவிக்கும் பெண்களைக் கொண்டிருப்பது மிகவும் முக்கியம். அந்த வகையில் என் பெண் நண்பர்கள் சிறந்தவர்கள்.

இன்றைய பெண்கள் நிதி மற்றும் உணர்வுப்பூர்வமாக உறுதியாகவும், சுதந்திரமாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். என் வாழ்க்கை ஏற்ற இறக்கங்கள் நிறைந்த பயணமாக இருந்துள்ளது. போராட்டங்கள், நல்ல நாள்கள், கெட்ட நாள்கள் என அனைத்தும் இருந்தன.

சில சமயங்களில் மிகவும் மகிழ்ச்சியாகவும், மற்ற நேரங்களில் மிகவும் சோகமாகவும் இருந்திருக்கிறேன். இவை அனைத்தும் வாழ்க்கையின் ஒரு பகுதிதான். எங்கள் பிரிவுக்குப் பிறகு என் மீது பல்வேறு வதந்திகள் கூறப்பட்டன.

அதில் ஒன்று நான் லெஸ்பியன் என்பது. உண்மையில் நான் லெஸ்பியன் அல்ல. அந்த வதந்தியில் என்னுடன் தொடர்புபடுத்தப்படும் நபர் என்னுடைய நெருங்கிய தோழி" என விளக்கமளித்திருக்கிறார்.

நடிகை மௌனி ராய்
நடிகை மௌனி ராய்

விவாகரத்துக்குப் பிறகு சிலர் மௌனி ராயை வேறு சிலருடன் தொடர்புபடுத்திப் பேசினர். அப்போது சூரஜ் நம்பியார் தனியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், ``எங்கள் பிரிவைப் பற்றி அண்மையில் வெளியான ஆதாரமற்ற செய்திகள் மிகவும் தரக்குறைவானவை மற்றும் முற்றிலும் உள்நோக்கம் கொண்டவை. உண்மையை நான் ஒருமுறை தெளிவாகக் கூறிவிடுகிறேன்.

ஜீவனாம்சம் (alimony) கோரப்படவில்லை. எந்தவிதமான கருத்து வேறுபாடுகளோ அல்லது சச்சரவுகளோ இல்லை. இதில் மூன்றாம் நபர் யாரும் சம்பந்தப்படவில்லை. பரஸ்பர மரியாதையுடனும், ஒருவருக்கொருவர் நலன் கருதியும் மௌனியும் நானும் பிரிந்து செல்ல முடிவெடுத்தோம். அதுதான் உண்மை.

மற்றபடி கூறப்படும் அனைத்தும் கற்பனையே. நான் தெளிவாகவும் இறுதியாகவும் கூற விரும்புகிறேன். எங்களைப் பற்றியோ அல்லது மூன்றாம் நபர் ஒருவரைப் பற்றியோ கூறப்படும் எந்தவொரு குற்றச்சாட்டிலும் உண்மையில்லை. இதில் மற்றவர்களை, குறிப்பாக இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லாத அப்பாவி நண்பர்களை இழுப்பது முறையற்றது.

இக்காலகட்டம் முழுவதும் மௌனியும் நானும் கண்ணியத்துடனேயே நடந்து கொண்டோம். இது குறித்துச் செய்தி வெளியிடுபவர்களும் அதே கண்ணியத்தை எங்களிடம் கடைப்பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.



from விகடன்

Comments