Parimala & Co: "மிஷ்கின் சார் எல்லாத்தையும் குறை சொல்ற கேரக்டர்!" - இயக்குநர் பாண்டிராஜ் கலகல

'தலைவன் தலைவி' திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருக்கும் 'பரிமளா & கோ' திரைப்படம் இம்மாதம் 28-ம் தேதி திரைக்கு வருகிறது. ஜெயராம், ஊர்வசி, 'லப்பர் பந்து' சஞ்சனா, அனந்திகா, மிஷ்கின், சாண்டி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு திரைப்படம் தொடர்பாக பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர்.

‘பரிமளா & கோ' படத்தில்...
‘பரிமளா & கோ' படத்தில்...

மேடையில் பேசிய இயக்குநர் பாண்டிராஜ், "'தலைவன் தலைவி' ரிலீஸுக்குப் பிறகு பெரிய ஹீரோக்கள் படம் எல்லாம் வந்தது, எல்லாருமே ரொம்ப ஆர்வமா இருந்தாங்க. பிறகு நான் ஜெயராம் சாருக்கும், ஊர்வசி அம்மாவுக்கும் கதை சொன்னேன். ரெண்டு பேருமே அவ்வளவு ரசிச்சாங்க.

ஊர்வசி அம்மா சிரித்துக்கொண்டே கதை கேட்டாங்க. எனக்கு அங்கு ஒரு நம்பிக்கை வந்தது. ஜெயராம் சாரும் கதையைக் கேட்டுட்டு, 'சார், சூப்பரா இருக்கு சார். இது வந்து கண்டிப்பா ஹிட் ஆகும் சார்'னு சொன்னார்.

ஒரு ரெண்டு லெஜண்ட்ஸ் வந்து இதைச் சொல்லும்போது, எனக்கும் நம்பிக்கை கிடைச்சது. அப்புறமா மிஷ்கின் சாருக்குக் கதை சொன்னேன். அவர், 'ஏய், நல்லா இருக்குடா. அதை பண்ணலாம்டா. கமர்ஷியலா சூப்பரா இருக்குடா. நான் பண்றேன்'னு சொல்லிட்டாரு.

ஏன்னா, மிஷ்கின் சார் எல்லாத்தையுமே நொட்டை சொல்கிற கேரக்டர். அவர் இதை ஓகே சொல்லும்போது எனக்கும் நம்பிக்கை வந்தது. ஊர்வசி அம்மாவை நாங்க 'அம்மா அம்மா'ன்னுதான் கூப்பிடுவோம்.

உண்மையிலேயே நீங்க எங்களை கஷ்டப்படுத்தல, நாங்கதான் உங்களை கஷ்டப்படுத்தியிருக்கோம். எல்லாத்துக்கும் ரொம்ப நன்றி. இந்தப் படத்துக்குப் பாலக்காட்டுல சூட்டிங் செய்திட்டு இருந்தோம்.

‘பரிமளா & கோ' படத்தில்...
‘பரிமளா & கோ' படத்தில்...

அங்கப் போன முதல் நாளே, ஊர்வசி அம்மாவுடைய அண்ணன் இறந்துவிட்டதாக போன் வந்தது. எங்களுக்கு என்ன பண்றதுனே தெரியல. படத்துக்காக பெரிய செட் அங்க போட்டுட்டோம். அப்போ ஊர்வசி அம்மா, 'பாண்டி, நீ கவலைப்படாத, நீங்க கேன்சல் பண்ண வேண்டாம்.

நான் போயிட்டு மறுநாளே வந்துடுறேன்'னு சொல்லி மறுநாளே படப்பிடிப்புக்கு வந்தாங்க. அதுல பெரிய சவால் என்னன்னா, பயங்கர காமெடியான சீன்ல நடிக்கணும். அது ரொம்ப கஷ்டம். ஒரு சோகத்துல இருக்கிற இவங்களால எப்படி காமெடியா பண்ண முடியும்னு யோசிச்சுட்டு இருந்தேன். ஆனா, அந்த சீன்ல பிரிச்சிட்டாங்க!" என்றார்.



from விகடன்

Comments