இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் வருடந்தோறும் பி.கே. ரோஸி திரைப்பட விழாவை நடத்தி வருகிறது.
ஐந்தாவது முறையாக இந்த ஆண்டும் அந்தத் திரைப்பட விழா நடைபெற்றிருக்கிறது.
இந்த ஆண்டின் பி.கே. ரோஸி திரைப்பட விழா கடந்த ஏப்ரல் 8-ம் தேதி தொடங்கி, நேற்றோடு முடிவடைந்திருக்கிறது.
இந்தத் திரைப்பட விழாவின் இறுதி நாளான நேற்று, இயக்குநர் பா. ரஞ்சித் செய்தியாளர்களிடையே பேசியிருக்கிறார்.
‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியானது குறித்து இயக்குநர் பா. ரஞ்சித், “ரொம்பக் கவலையான விஷயம் இது. தவறான செயல் இது.
நிறைய கோடி இந்தப் படத்திற்காக செலவழித்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, பலரும் இந்தப் படத்திற்காகப் பெரும் உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.
படத்தை லீக் செய்வதற்கு எப்படி அவர்களுக்கு மனம் வந்தது என்றே தெரியவில்லை. படத்தை லீக் செய்தவர்கள் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும்” என்றார்.
இளைஞர்கள் அரசியலில் பங்கெடுப்பது குறித்து பா. ரஞ்சித், “இப்போது கட்சி சார்பற்று யோசிக்கும் இளைஞர்கள் பலர் இருக்கிறார்கள். சமூக நலத்தின் மீது அக்கறை கொண்ட நிறைய இளைஞர்களை நாம் இப்போது பார்க்கிறோம்.
நிறைய இளைஞர்களுக்கு பொறுப்பும் வந்திருக்கிறது. பாண்டிச்சேரியில் 96 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கிறது.
இதன் மூலமாக நிறைய இளைஞர்கள் ஓட்டு போடுவதற்கு முன் வந்திருப்பது தெரிகிறது” என்றவரிடம் ‘மாற்றம் இருக்குமா?’ எனக் கேட்கப்பட்டது. இதற்கு பா. ரஞ்சித், “மாற்றம் இருக்க வேண்டும்” என்றார்.
from விகடன்
Comments