சரண் இயக்கத்தில் அஜித்குமார், ஷாலினி, ரகுவரன், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’அமர்க்களம்’.
நேற்று (ஏப்ரல் 24) அஜித்குமார், ஷாலினி திருமண நாளை முன்னிட்டு 4K தொழில்நுட்பத்தில் அமர்க்களம் திரைப்படம் வெளியானது.
இந்நிலையில் அஜித்தை வைத்து அதிகப் படங்களை இயக்கிய இயக்குநர் சரண், அஜித் ஏன் தனது ரசிகர் மன்றத்தை கலைத்தார் என்பது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியிருக்கிறார்.
இதுதொடர்பாக பேசிய அவர், " அஜித்தைப் பொறுத்தவரை அவர் தனது ரசிகர்களை வெறும் ரசிகர்களாகப் பார்க்காமல், அவர்களை மிகவும் மதிக்கக்கூடியவர்.
'அமர்க்களம்' படம் வெளியான அன்றைய இரவே சுமார் 25,000-க்கும் மேற்பட்ட ரசிகர் மன்றங்கள் தொடங்கப்பட்டன. அந்த அளவிற்கு அவருக்குப் பிரம்மாண்டமான வரவேற்பு இருந்தது.
ரசிகர் மன்றங்கள் பெருகிய போது, அவற்றுக்குள் தேவையற்றப் பதவிச் சண்டைகளும், அரசியல் மோதல்களும் உருவாவதை அஜித் கவனித்தார். மன்றப் பதவிகளுக்காக ரசிகர்கள் தங்களுக்குள்ளேயே மோதிக்கொள்வதும், சண்டையிட்டுக் கொள்வதும் அஜித்திற்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது.
ரசிகர்கள் அவர்களுக்குள் மோதிக்கொள்வதை அவர் ஒருபோதும் விரும்பவில்லை. இதில் எனக்கு உடன்பாடில்லை என்று அவர் என்னிடம் பலமுறை கூறியுள்ளார்.
ரசிகர்கள் தங்களது குடும்பம், வேலை மற்றும் எதிர்காலத்தைக் கவனிக்க வேண்டும் என்பதே அஜித்தின் விருப்பமாக இருந்தது. ரசிகர்கள் நன்றாக இருக்க வேண்டும், அவர்களுக்குள் எந்த மோதலும் இருக்கக் கூடாது என்று சொல்லித்தான் அவர் தனது ரசிகர் மன்றத்தை கலைத்தார்.
அவர் எப்போதும், 'நீங்கள் உங்கள் வாழ்க்கையை பாருங்கள். என்னுடைய படம் பிடித்திருந்தால் வந்து பாருங்கள்' என்றுதான் சொல்வார். புகழுக்காகவும், மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்பதற்காகவும் அவர் பேசமாட்டார்" என்று கூறியிருக்கிறார்.
from விகடன்
Comments