காற்றோடு பட்டம் போல: "பசியெடுத்த வேட்டைப் புலியாகச் சுற்றும்போது..." - கவிஞர் சாரதி |வரித்துணையே 6

முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக்கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த 'வரித்துணையே..!'.

Neelothi Song
Neelothi Song

இன்றைய பகுதிக்கு, 'அயோத்தி' படத்தில் அமைந்திருக்கும் 'காற்றோடு பட்டம் போல' பாடலைப் பற்றி பாடலாசிரியர் கவிஞர் சாரதியிடம் பேசினோம்.

மனிதம் பேசும் படைப்பின் கருவைத் தாங்கி நின்ற இப்பாடல் பலருக்குள் பல விஷயங்களை உணரச் செய்தது. இப்பாடல் பற்றி அவர்....

"காற்றோடு பட்டம் போல பாடலுக்காகப் பெரியளவில் எனக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை எனச் சிறிய வருத்தம் எனக்குள் இருக்கிறதுதான். ஆனால், பாடல் வந்த சில மாதங்களில் இந்தப் பாடலுக்காகச் சிலர் என்னைப் பேட்டி கண்டார்கள்.

அதை எனக்கான அங்கீகாரமாகப் பார்க்கிறேன். அந்தப் பாடலுக்குப் பிறகும் எனக்குப் பெரியளவில் வாய்ப்புகள் அமையவில்லை என்பது வேறு விஷயம்." என்றவர், "ஒரு மனிதன் இன்னொரு மனிதனை நம்புவது ஒரு அன்பின் வெளிப்பாடாக நான் பார்க்கிறேன். அப்படி என்னை நம்பி இந்தப் பாடலை இயக்குநர் மந்திர மூர்த்தி எனக்குக் கொடுத்தார்.

Katrodu Pattam Pola Song
Katrodu Pattam Pola Song

ரகுநந்தன் சாரின் அழகான டியூன், படம் பேசும் விஷயங்கள் போன்றவை என்னை மக்களிடையே கொண்டு சேர்த்தது. பிறகு, அந்தப் பாடல் பலருக்கும் பிடித்தமான பாடலாக மாறியது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது.

இவ்வொரு பாடலுக்காக இயக்குநர் மந்திர மூர்த்தி எனக்கு இரண்டு மணி நேரக் கதையுமே சொன்னார். இந்தப் பாடல்தான் படத்தின் கருவாக இருப்பதனால் முழுக் கதையையும் எனக்கு அவர் விவரித்தார். இந்தப் பாடலின் வாய்ப்பு எனக்கு வருவதற்கு முன்பு பசியெடுத்த வேட்டைப்புலியாகத்தான் நான் சுற்றிக் கொண்டிருந்தேன்.

நம்முடைய வாழ்க்கை இப்படி இருக்கிறது, மனைவி குழந்தைகள் வந்துவிட்டனர். இனிமேலும், சினிமாவில் பயணப்படலாமா அல்லது வேறு வேலைக்குச் சென்றுவிடலாமா என யோசித்துக் கொண்டிருக்கும் போது இந்தப் பாடலுக்காக இயக்குநர் என்னை நம்பித் தேடி வந்தார்.

அந்த வாய்ப்பை நான் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதிலும் நான் உறுதியாக இருந்தேன். ஒவ்வொரு கவிஞனுக்கும் ஒரு பாடல் வந்தமைந்ததற்குப் பின் பல கதைகள் இருக்கும். அதுபோல, இப்பாடலுக்கும் ஒரு கதை இருக்கிறது.

இந்தப் பாடலின் டியூன் எனக்கு மாலை நேரத்தில் கைகளுக்குக் கிடைத்தது. அடுத்த நாள் காலை, என்னுடைய நெருங்கிய உறவினர் வீட்டு விசேஷத்திற்காக நான் தஞ்சாவூர் செல்ல வேண்டியிருந்தது. உடனடியாக, திட்டங்களை மாற்றிவிட்டு என் குடும்பத்தினரை மட்டும் அனுப்பி வைக்க ஆயத்தமானேன்.

பேருந்தில் ஏற்றிவிடச் செல்கையில் என்னுடைய மனைவியும், குழந்தைகளும் பல விஷயங்களை என்னிடம் சொல்கிறார்கள். ஆனால், அவர்கள் சொல்லும் வார்த்தைகள் மனதளவில் மட்டுமே என்னை வந்து சேர்ந்தன.

Katrodu Pattam Pola Song
Katrodu Pattam Pola Song

என்னுடைய எண்ணம் அனைத்தும் இந்த டியூனில் இருந்தது. கதையைக் கேட்ட பிறகு உருகிப் போய் ஆழ்ந்த மனநிலையிலும் நான் இருந்தேன். பிறகு அவர்களை பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு அவசரமாக பாடல் எழுதுவதற்கு வீட்டிற்கு வந்துவிட்டேன். பாடல் எழுதத் தொடங்கிய பிறகு என்னுடைய எண்ணம் அத்தனையும் என் குடும்பத்தின் மீதுதான் இருந்தது.

இந்தப் பாடல் மனைவியின் பிரிவைப் பற்றியது, ஒரு விபத்தில் சிக்கிக்கொள்ளும் சூழலுக்குப் பிறகு வரும் பாடல் இது. என்னுடைய எண்ணம் அத்தனையும் நம் குடும்பமும் இப்போது பேருந்தில் பயணித்துக்கொண்டிருக்கிறார்களே என்ற எண்ணத்தில்தான் மூழ்கியிருந்தது.

பிறகு பாடல் எழுதுவதை நிறுத்திவிட்டேன். காலையில் என் குடும்பத்தினர் சென்று சேர்ந்த பிறகுதான் இந்தப் பாடலை எழுதத் தொடங்கினேன். அவசர அவசரமாகத்தான் இப்பாடலை எழுதினேன்.

முதலில் 'காற்றோடு பட்டம் போல' என்கிற வரி பாடலிலேயே இல்லை. வேறு சொற்கள் கொண்டுதான் பாடலை எழுதினேன். இயக்குநருக்கும் அது பிடித்திருந்தது. அந்த வரிகளை கிளைமேக்ஸில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இப்போது கணவன் - மனைவிக்கான பாடலாக ஒன்று எழுதலாம் எனச் சொன்னார். அப்படி எழுதின பாடல்தான் 'காற்றோடு பட்டம் போல'." என்றார்.

Lyricist Sarathy
Lyricist Sarathy

"மரணத்தைத் தேடி ஓடுவதுதானே வாழ்க்கை. அருகிலிருக்கும் பொருள்கள் மற்றும் மனிதர்களின் அருமை இருக்கும்போது புரியாது. கிடைத்த உறவுகளை என்றும் விட்டுவிடக் கூடாது. அப்படித்தான் நான் பயணப்படுகிறேன். அதை வைத்துதான் 'பக்கத்துல வாழும்போது, உன்னருமை தெரியல, உன்னருமை தெரியும்போது பக்கம் நீ இல்ல!' என்கிற வரியை எழுதினேன்.

இந்தப் பாடல் என்னுடைய உறவுகளைத்தான் எனக்கு நினைவூட்டியது. சாலையோரங்களில் எத்தனையோ கணவர்கள் குடித்துவிட்டு மனைவியைத் துன்புறுத்துகிறார்கள். பல கணவர்களும் அதை மாற்றிக்கொள்ள வேண்டுமென நினைத்தேன். அது இப்போது மாறியிருப்பதாகவும் நம்புகிறேன்!" என்றார் முக மலர்ச்சியுடன்.



from விகடன்

Comments