Arijit Singh: ``இதோடு நான் விடைபெறுகிறேன்" - ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பாடகர் அரிஜித் சிங்

பாடகர் அரிஜித் சிங் என்ற பெயர் பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்திருக்காவிட்டாலும், அவரின் பாடலை ஒருமுறையாவது கேட்காமல் இருந்திருக்க முடியாது.

உதாரணமாக சூர்யாவின் 24 படத்தில் ''நான் உன் அழகினிலே" பாடல் ஆல்டைம் ஃபேவரிட்டாக பலரின் பிளே லிஸ்டில் இருக்கும். சிறு வயதிலேயே கிளாசிக்கல் மியூசிக் கற்ற அரிஜித் சிங், 2005-ல் Fame Gurukul ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றார். அதில் அவர் வெற்றிபெறவில்லை என்றாலும், அவரின் தனித்துவமான குரல் இசையமைப்பாளர்களைக் கவர்ந்தது.

 Arijit Singh
Arijit Singh

2011-ல் Murder 2 படத்தில் "Phir Mohabbat" என்ற பாடல் மூலம் திரையிசைப் பாடகராக அறிமுகமானார். Aashiqui 2 படத்தில் "Tum Hi Ho" பாடலால் ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்தார். தொடர்ந்து இந்தி, பெங்காலி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பாடியுள்ளார். 2 தேசிய விருதுகள், 8 பிலிம்பேர் விருதுகள், கடந்த ஆண்டு பத்ம ஸ்ரீ விருதும் வழங்கப்பட்டன.

இந்த நிலையில் அர்ஜித் சிங் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ``அனைவருக்கும் வணக்கம், இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். இத்தனை ஆண்டுகளாக ரசிகர்களாக எனக்கு நீங்கள் அளித்த அளவற்ற அன்பிற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

இனிமேல் பின்னணிப் பாடகராக நான் எந்தப் புதிய பணிகளையும் ஏற்கப்போவதில்லை என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். இதோடு நான் விடைபெறுகிறேன். இது ஒரு அற்புதமான பயணம்" என அறிவித்திருக்கிறார்.

அவரின் இந்த முடிவு, அவரின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.



from விகடன்

Comments