இயக்குநர் மாரி செல்வராஜைப் பாராட்டிப் பேசியிருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.
இயக்குநர் மாரி செல்வராஜ் 'மாமன்னன்' படத்தைத் தொடர்ந்து 'வாழை' படத்தை இயக்கியிருக்கிறார். அவரின் தயாரிப்பு நிறுவனமான `Navvi Studios'-யின் முதல் திரைப்படம் இது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். முக்கியமான கேரக்டர்களில் ராகுல் மற்றும் பொன்வேல் ஆகிய சிறுவர்கள் நடித்திருக்கின்றனர்.

இந்தத் திரைப்படம் வரும் 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் 'வாழை' படத்தைச் சிறப்புக் காட்சி மூலம் பார்த்த இயக்குநர் விக்னேஷ் சிவன் மாரி செல்வராஜைப் பாராட்டி இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
அதில், "மாரி செல்வராஜ் உன் வாழ்க்கையின் நல்ல பக்கங்களை மட்டுமே படித்துவிட்டு உன் படைப்புகளைப் பார்க்கத் தொடங்கினேன். பிரமிப்பாக இருந்தது.
இப்போது 'வாழை' திரைப்படத்தில் உன் வாழ்க்கையின் இருண்ட பக்கங்களையும் பார்த்தபிறகு, உன் மீதான மரியாதை ஆயிரம் மடங்காய் அதிகரித்திருக்கிறது. இனி, உன் படைப்புகள் மீதான மரியாதையும் அவ்வாறே கூடும். வாழையடி வாழையாய் உன் தலைமுறையே சிறக்கும்.
❤️ @mari_selvaraj உன் வாழ்க்கையின் நல்ல பக்கங்களை மட்டுமே படித்துவிட்டு உன் படைப்புகளை பார்க்கத் தொடங்கினேன். பிரமிப்பாக இருந்தது. இப்போது, #Vaazhai -ல் உன் வாழ்க்கையின் இருண்ட பக்கங்களையும் பார்த்தபிறகு, உன்மீதான மரியாதை ஆயிரம் மடங்காய் அதிகரித்திருக்கிறது. இனி, உன்… pic.twitter.com/d3X4LTy0Xh
— VigneshShivan (@VigneshShivN) August 20, 2024
சிறப்புக் காட்சிக்கு அழைத்தாய், திரை பார்த்து மெய் சிலிர்த்தேன். மீண்டும் பார்க்கும் ஆவலோடு ஆகஸ்டு 23-க்காகக் காத்திருக்கிறேன். மனதைக் கவரும் 'வாழை' திரைப்படத்தைத் தயாரித்ததற்காகத் திரைப்படக் குழுவுக்கு எனது பாராட்டுகள்" என்று பதிவிட்டிருக்கிறார்.
from விகடன்
Comments